சென்னை: நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் காணொலி ஒன்றை முன்னதாக வெளியிட்டார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலக்கத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11்ஆம் தேதி மத்தியக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மீரா மிதுன் கைது
ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோரை ஆகஸ்ட் 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன், ஷாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகை மீண்டும் ஆஜர்
இந்நிலையில், மீரா மிதுன், ஷாம் அபிஷேக் இருவரின் மீதான நீதிமன்றக் காவல் இன்றுடன் (ஆக27) நிறைவடைந்ததால், மீண்டும் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
அப்போது நீதிபதி செல்வகுமார், நடிகை மீரா மிதுன், ஷாம் அபிஷேக் இருவரின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க நாட்கள் ஆகலாம் - அர்ச்சனா