நாட்டின் 73ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றினார். மேலும், பல விருதுகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்:
சென்னை விமான நிலையம் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கின்றது. இங்கு நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் ஸ்ரீகுமார் தேசியக்கொடி ஏற்றினார். அப்போது சி.எஸ்.எஸ். காவலர்கள், விமான காவலர்கள், விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அலுவலர்கள், பயணிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் விமான நிலைய இயக்குநர் இனிப்புகளை வழங்கினார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள், சுதந்திர தின போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார். சென்னை ஆவடியில் உள்ள மத்திய அதிவிரைவுப் படை, துரித காரிய பல் என்றழைக்கப்படும் படையினர் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர்.
திருவள்ளூரில் சுதந்திர தினக் கொண்டாட்டம்:
இந்தியத் திருநாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி திருவள்ளூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து 126 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 36 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
வேலூரில் சுதந்திர தினக் கொண்டாட்டம்:
வேலூர் நேரு விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மக்கள் மனதில் ஒற்றுமையை வலியுறுத்தி வெள்ளை நிற சமாதான புறாவை பறக்கவிட்டார். மேலும், இந்த விழாவில் 68 பேருக்கு ரூ. 1.18 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விழுப்புரத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்:
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சுதந்திர தின விழா நினைவாக மூவர்ண பலூன்கள், வெள்ளை நிற புறா பறக்கவிடப்பட்டது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இறுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.