சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் மேலும் 30 ஆயிரத்து 376 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் மலேசியாவில் இருந்து வந்த நான்கு நபர்கள் உட்பட 2,142 நபர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 65 லட்சத்து 59 ஆயிரத்து 268 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 35 லட்சத்து 22 ஆயிரத்து 142 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு ஆளாகி இருந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் 16,829 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,219 பேர் குணமடைந்து இருக்கின்றனர், இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 67 ஆயிரத்து 283ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக 561 நபர்களுக்கும்,செங்கல்பட்டில் 296 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 179 நபர்களுக்கும் திருவள்ளூரில் 106 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பரவலாக உள்ளது. மேலும் நோய் தொற்றிற்காக பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 6.7% ஆக உள்ளது.
இதையும் படிங்க: மணிரத்னத்திற்கு கரோனா இல்லை என மறுப்பு