செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். அதிகாலையில் கிளம்பும் இவர்களில் பெரும்பாலானோர், புறநகர் மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர்.
செங்கல்பட்டிலிருந்து, தினந்தோறும் 26 புறநகர் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரைக்கு, ஞாயிற்று கிழமைகள் தவிர்த்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று(டிச.25) காலை வழக்கம் போல, ரயிலில் பயணிக்க வந்தவர்களிடம் ரயில்வே அலுவலர்கள், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி காலை வேளை ரயில்கள் இயக்கப்படாது என அறிவித்தனர். காலை 10 மணிக்குப் பிறகே ரயில் சேவைகள் தொடங்கும் எனத் தெரிவித்தனர்.
இதனால் பயணிகள் கடும் அதிருப்திக்குள்ளாகி, அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரயில்வே காவலர்கள் பயணிகளை சமாதானப்படுத்தியதை அடுத்து, பயணிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து பயணிகள் அனைவரும் பேருந்துகளில் பயணிக்க திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: பயணிகள் வருகை குறைவு - ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம்