செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்துள்ளது சிறுங்குன்றம். இங்கு தங்களது வாழ்வாதாரத்திற்காக, இடம்பெயர்ந்து வந்த இருளர் இன மக்கள், 150-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். மரம் வெட்டுதல், செங்கல் சூளை, அரிசி ஆலைகளில் பணி போன்றவையே இவர்களின் வயிற்றுப் பசியைப் போக்கிவந்தன.
இருளர்கள் விரட்டியடிப்பு
இவர்களுக்குச் சொந்தமாக வீடுகளெல்லாம் கிடையாது. எனவே, தார்ப்பாய்களைக் கொண்டு கூடாரம், குடிசைகள் அமைத்து வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் சிலர், இவர்களை அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளனர்.
அப்போது, இருளர் இன மக்கள் அங்கிருந்து செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள், இவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கியும், பிய்த்துப் போட்டும் இவர்களை விரட்டியுள்ளனர். இது குறித்து இருளர் இன மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இருளர் இன மக்கள் முற்றுகை
இதனால், செய்வதறியாது திகைத்த இருளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு உரிய நிவாரணமும், நியாயமும் கோரி ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இவர்கள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: கானல் நீரான கல்லூரி படிப்பு : மறுக்கப்படும் இருளர் இன மக்களின் உரிமைகள்!