செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிலைய பொறுப்பு மருத்துவராக தீனதயாளன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இந்த அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஊழல், திருட்டு, பாலியல் அத்துமீறல் போன்றவை குறித்து முறைப்படி உயர் அலுவலர்களுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளித்ததாகக் கூறினார்.
ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்களை விடுவித்து, தன்னை அமைச்சர் இட மாற்றம் செய்து விட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனக்கு இதய நோய் உள்ளிட்ட பல வியாதிகள் இருப்பதாக மன்றாடியும், செங்கல்பட்டில் இருந்து சேலத்திற்கு இடமாற்றம் செய்து விட்டார்கள் என்றார்.
இதனிடையே அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மல்டி பாரா மானிட்டரை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரை ஈடிவி பாரத் செய்தி தொடர்பு கொண்டு கேட்டபோது, “இரு அலுவலர்கள் மாற்றி மாற்றி புகார் தெரிவித்துக் கொண்டிருந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என கூறினார்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “செங்கல்பட்டு அரசு மருத்துவர் தீனதயாளன் பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர். கருணை அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் அளித்த பேட்டியைத் தொடர்ந்து தீனதயாளன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இதுவரை பணியாற்றிய 15 வருட பணிக் காலத்தில், என் மீது எந்த விதமான சிறிய புகாரும் துறை ரீதியாகக் கிடையாது.
அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் நான் பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர் என்று அமைச்சர் கூறுகிறார்? எனக்கு பணியிட மாற்றம் அளிக்கப்பட்டவுடன் அரசு உத்தரவை மதித்து உடனடியாக சேலத்தில் சென்று பணியில் சேர்ந்து, உடல்நிலை காரணமாக மருத்துவ விடுப்பில் உள்ளேன்.
ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் பணியிட மாற்றம் என்ற பெயரில் சென்னையிலேயே பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றொரு மருத்துவ அலுவலர், பணியிடமாற்ற உத்தரவு நாகப்பட்டினத்திற்கு அளிக்கப்பட்டும் இதுவரை பணியில் சென்று சேரவில்லை.
மருத்துவமனை உபகரணத்தை திருடிய ஒரு மருத்துவர் எந்த வித நடவடிக்கைக்கும் ஆளாகாமல் உபகரணத்தை அதே இடத்தில் வைத்து விட்டதால், இதுவரை செங்கல்பட்டிலேயே பணியில் தொடர்கிறார்.
எனவே முதலமைச்சர் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து, பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படும் என்னை மீண்டும் செங்கல்பட்டிலேயே பணியமர்த்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் மா.சுப்ரமணியன் மீது அரசு மருத்துவர் புகார் அளிக்கும் பரபரப்பு வீடியோ...!