சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொள்கை விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டின் வெறுப்புக்குரிய கட்சியாக பாஜக உள்ளது; தமிழகத்தில் நோட்டாவிற்குக் கீழே உள்ள கட்சியாகதான் இது திகழ்கிறது.
எனவே அக்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பது மனிதநேய ஜனநாயக கட்சியின் வேண்டுகோள். பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால், அக்கட்சியிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிட தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதுகுறித்து எங்கள் தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற நிதிநிலை பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு தமிமுன் அன்சாரி அளித்த பதில் பின்வருமாறு:
தமிழக பட்ஜெட்டில் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைத்தல் (அ) குறைந்தபட்சம் நேரத்தையாவது குறைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.
கஜா புயல் பாதிப்பு குறித்து சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இதுவும் வழக்கமான பட்ஜெட்டாகவே அமைந்தது.
மொத்தத்தில் சொல்லவேண்டுமானால், 'மாசி மாதம் குளிரை எதிர்பார்த்தோம்; ஆனால் பங்குனி மாத புழுக்கம் இருப்பதாக உணர்கிறோம்' என்று அவர் தெரிவித்தார்.