அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ராமாமிர்தம். இவரது நிலத்தைத் தம்பி மகன் சரவணன் என்பவர் பராமரித்துப் பயிர் செய்து வந்தார். திடீரென்று ராமாமிர்தம் தமது நிலத்தை தாமே பராமரிக்கப் போவதாகச் சரவணனிடம் தெரிவித்துள்ளார் . இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ராமாமிர்தம் கோயில் தட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்குசென்ற சரவணன் தன்னிடமிருந்த இரும்பு கம்பியால் ராமாமிருதத்தை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமாமிருதம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து ஆண்டிமடம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து சரவணனைக் கைது செய்து வழக்கு தொடுத்தனர்.
அரியலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயகுமார் முன்னிலையில் வழக்கு விசாரணை முடிவு பெற்றது. நீதிபதி தனது தீர்ப்பில் சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சரவணனை காவல்துறையினர் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குழந்தையை கொஞ்சிய பெண்... மாயமான தங்கநகை!