அரியலூர் மாவட்டம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் உதவி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் சென்னையிலுள்ள மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், இன்று (அக். 27) வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் காவல் துறையினர், வீட்டை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.