அரியலூர் மாவட்டம் ராயம்புரம் கிராமத்தில் புதிய ஏரி அருகே மருதையன் என்ற கோயில் உள்ளது. இக்கோயில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பதால், இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்றிரவு மருதையன் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது, வழக்கமாக ஏரிக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் அவ்வழியாக திருடனை பார்த்ததும் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் திருடனை பிடித்து சரமாரியாக அடித்தனர். பின்னர் செந்துறை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமர் (25) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் அடித்ததில் காயம்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மருதையன் கோயில் பூசாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ’ரோப் கார் வந்தா எங்க வாழ்வாதாரம் பறிபோகும்
’