இங்கிலாந்து கிளப் அணிகளுக்குள் நடக்கும் எஃப்.ஏ. கோப்பைத் தொடரின் மூன்றாவது சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்த்து வுல்ஃப்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டம் தொடங்கியது முதலே வுல்ஃப்ஸ் அணி தடுப்பாட்டத்தில் விளையாடியது. மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை வுல்ஃப்ஸ் அணி டிபெண்டர்கள் லாவகமாக தடுத்தனர்.
இந்தத் தடுப்பாட்ட விளையாட்டு முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அதையடுத்து இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் வுல்ஃப்ஸ் அணி வீரர் ஜிமெனஸ் அடித்த பந்தினால் அந்த அணிக்கு கார்னர் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வுல்ஃப்ஸ் அணி வீணடித்தது. அதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மாடா கோல் அடிக்க எடுத்த முயற்சிகள், இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டன. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலை வகித்தன.
இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணி சரியாக பந்தை மற்ற வீரர்களிடம் கடத்த, வுல்ஃப்ஸ் அணி வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். அதையடுத்து மான்செஸ்டர் அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அந்த நேரத்தில் அணியில் இரண்டு மாற்றங்களை செய்தனர். கிரீன்வுட், ஜேம்ஸ் ஆகிய வீரர்களுக்கு பதிலாக பெரைரா, ராஷ்ஃபோர்டு ஆகிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
பின்னர் மான்செஸ்டர் அணியின் மாடா 67ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வுல்ஃப்ஸ் அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாட, அதனை மான்செஸ்டர் டிபெண்டர்கள் தவிடுபொடியாக்கினர். பின்னர் 74ஆவது நிமிடத்தில் வுல்ஃப்ஸ் அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அந்த வாய்ப்பையும் வுல்ஃப்ஸ் அணியினர் வீணடித்தனர். இதனிடையே அந்த அணி வீரர் மகுரேவுக்கு காயம் ஏற்பட்டது.
இதன்பின் மான்செஸ்டர் அணி வீரர்கள் தங்களுக்குள்ளேயே பந்தை பாஸ் செய்து இரண்டாம் பாதியை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதையடுத்து கூடுதலாக நான்கு நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதிலும் வுல்ஃப்ஸ் அணி கோல்கள் எதும் போடாததால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என வுல்ஃப்ஸ் அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க: ஒரே சீசனில் ரூ.6,000 கோடி வருவாய் - பார்சிலோனா சாதனை!