நடப்பு ஆண்டுக்கான ஐஎஸ்எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு எஃப்.சி. அணியை எதிர்த்து ஒடிசா எஃப்.சி. அணி ஆடியது. இதற்கு முன் பெங்களூரு அணி ஆடிய போட்டியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்ததால், பெங்களூரு அணி அதன் சொந்த மண்ணில் மீண்டும் வெற்றியைத் தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. மூன்றாவது நிமிடத்தில் ஒடிசா அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை ஹெர்னாண்டஸ் சரியாக பயன்படுத்தி பெங்களூரு அணியின் பாக்ஸுக்குள் பந்தை கொண்டு செல்ல, அது பெங்களூரு அணி வீரர்களால் தடுக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூரு அணியின் பிரவுன், ஒடிசாவின் தடுப்பாட்டத்தைக் கடந்து 23ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இதையடுத்து அடுத்த 2 நிமிடத்தில் மீண்டும் பெங்களூரு அணியின் ராகுல் இரண்டாவது கோல் அடிக்க, ஆட்டத்தில் பெங்களுரூ அணியின் கை ஓங்கியது. இதையடுத்து ஒடிசா அணிக்கு ஆட்டத்தில் மீண்டும் உள்ளே வருவதற்கு கிடைத்த வாய்ப்பை மார்ட்டின் வீணடித்தார்.
இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வர, பெங்களுரூ அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தையே பெங்களுரூ அணி தொடர்ந்தது.
பின்னர் 61ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் தவறால், பெங்களூரு அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி கேப்டன் சுனில் ஷேத்ரி மூன்றாவது கோலை அடித்து அசத்தினார். இறுதியாக ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 7 வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஒடிசாவின் நான்கு தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது.
இதையும் படிங்க: ஒரு கோப்பைக்காக மோதும் ஐந்து டீம்... பிக் பாஷ் புதுமை!