12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ராயல் லேஞர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இதைத்தொடர்ந்து, ரோஹித் ஷர்மா, டி காக் ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்த நிலையில், டி காக் 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மூன்றாவது வரிசையில் வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் மீண்டும் பேட்டிங்கில் ஃபார்முக்கு வந்த ரோஹித் ஷர்மா 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பு நழுவவிட்டார். பின், நான்காவது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் மிரட்டலாக ஆடினார். சாஹல் வீசிய 14ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர்களாக மாற்றினார்.
நான்காவது பந்தையும் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டார் யுவராஜ் சிங். ஆனால், அவர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் ஃபீல்டு செய்த முகமது சீராஜ் சிறப்பாக பிடித்தார். இதனால் மும்பை அணி 13.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. மூன்று சிக்சர்களை வழங்கினாலும், அதன் பின் சாஹல் ஆட்டத்தை தனது சுழற்பந்துவீச்சின் மூலம் முற்றிலும் மாற்றினார்.
மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் விக்கெட்டை சாஹல் அடுத்தடுத்து கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, குருணல் பாண்டியா, மிட்சல் மெக்லனகன் ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், 13.4 ஓவர்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்த மும்பை அணி 17. 1 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததது.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், ஹர்திக் பாண்டியா சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். இதனால், மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது.