2013 ஆம் ஆண்டு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்து போட்டிக்கு திரும்பியதும், கோப்பையை வென்று சென்னை அணி யார் என்பதை நிரூபித்தது.
இந்நிலையில், ரோர் ஆஃப் தி லயன் என்ற பெயரில், தோனி குறித்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதில் மேட்ச் பிக்ஸிங் குறித்து தோனி முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அதில், 2013 ஆம் ஆண்டுதான் எனது வாழ்வில் மிகவும் கடினமான காலகட்டம். அப்போது மனதளவில் மிகப்பெரிய கஷ்டங்களை அனுபவித்தேன். 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலிருந்து லீக் சுற்றோடு வெளியேறிய போது கூட அந்த அளவிலான கஷ்டங்களை நான் அனுபவிக்கவில்லை. ஏனென்றால் அப்போது நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை.
ஆனால், 2013-ஆம் ஆண்டு மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என மக்கள் நம்பிவிட்டால், கிரிக்கெட் மீதான நம்பிக்கை போய்விடும். கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் சாத்தியமா என்றால் சாத்தியம்தான். மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக கூறப்பட்ட நேரம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. மக்கள் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக நம்பினார்கள். நிர்வாகத்தின் தரப்பில் தவறுகள் இருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ன தவறு செய்தது. நான் உட்பட பலரும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஊடகங்களில் எழுதப்பட்டது.
அப்போது என்னுடைய மவுனமும் தவறாக கருதப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில், கொலைக் குற்றத்தைவிட மிகப்பெரிய குற்றம் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுவது என சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.