இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறுமென முதலில் தெரிவிக்கப்பட்டதால், இந்தியா இந்தத் தொடரில் பங்கேற்காது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இத்தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால், 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி வசிம் கான் கூறியது பெரும் சர்ச்சையானது.
பின்னர் அதுபோன்ற கருத்தை தான் கூறவில்லை எனவும், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து ஆசிய கவுன்சில்தான் முடிவு எடுக்கும் என வசிம் கான் தெரிவித்திருந்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்தத் தொடர் துபாயில்தான் நடைபெறும் என்றும், அதில் பாகிஸ்தானுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தும் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், "போட்டிகளின் விதிமுறைப்படி எந்த விளையாட்டுத் தொடர் எங்கு நடந்தாலும், இந்தியா நிச்சயம் பங்கேற்கும்" என்றார்.
கடந்தாண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோடி இருக்கும்வரை இந்தியா - பாக் உறவில் முன்னேற்றம் இருக்காது - அப்ரிடி