19 வயதிற்க்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். இவரது பயிற்சியின் கீழ், இந்திய இளையோர் அணி 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டி வரையிலும், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை வென்றும் சாதனைப் படைத்தது. இவரது பயிற்சியின் கீழ் ப்ரித்வி ஷா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் என பல வீரர்கள் தற்போதைய இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் டிராவிட் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இன்னும் சில தினங்களில் வெளியிடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமி என்பது திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களை இந்திய அணிக்கு விளையாட தயார் செய்வதற்கான இடம். இந்திய வீரர்களின் பயிற்சி முகாம், யோ-யோ டெஸ்ட் உள்ளிட்டவை தேசிய கிரிக்கெட் அகாடமியில்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.