இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் 21 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த விஜய் சங்கர், டி20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்காக அசத்திய ஹரி நிஷாந்துக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19 விஜய் ஹசாரே சீசனில் தமிழ்நாடு அணியில் இடம்பெறாமல் இருந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் இம்முறை இடம்பெற்றுள்ளனர். இதனால், இவ்விரு வீரர்களும் நிச்சயம் தமிழ்நாடு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2016-17 விஜய் ஹசாரே தொடரை தமிழ்நாடு அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர், அஸ்வின், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர், பாபா அபராஜித், என். ஜெகதீசன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, அபிநவ் முகுந்த், ஹரி நிஷாந்த், பிரதோஷ் ரஞ்சன், லோகஷ்வர், கே. முகுந்த், நடராஜன், கே. விக்னேஷ், எம். முகமது, அபிஷேக் தன்வார், ஜே. கவுசிக், சாய் கிஷோர், சித்தார்த், முருகன் அஸ்வின்.