ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 18 கட்ட விசாரணைகளை இவ்வாணையம் நடத்தி முடிந்துள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் சாட்சியங்களாக ஆணையத்தின் முன் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்துள்ளனர்.
600க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒரு நபர் ஆணையத்தின் 19ஆவது கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படும் என ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி ஒரு நபர் ஆணையத்தின் பத்தொன்பதாவது கட்ட விசாரணை பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
![Sterlite shooting: Commission summons actor Rajinikanth in person](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5953695_tut.jpg)
இதில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளிப்பதற்காக தூத்துக்குடி சென்றிருந்த ரஜினிகாந்த், செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ’போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததால் கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது’ என கருத்து தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் ஏற்கனவே ஒரு நபர் ஆணையத்தின் சாட்சியங்களாக ஆஜரான பலரும் நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் ரஜினிகாந்திற்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு நபர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு நபர் ஆணையத்தின் அலுவலகத்தில் இருந்து இந்த சம்மன் நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிம்பு நடத்தும் 'மாநாடு' - படையெடுக்கும் நட்சத்திரங்கள்!