சென்னை : எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா நடித்துள்ள படம் “மஹா”. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படம் ஹன்சிகாவின் ஐம்பதாவது படமாகும்.
இந்த படத்தில் நடிகர் சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஶ்ரீகாந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதியளித்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டது.
தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதால் படக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்து நடிகை ஹன்சிகா கூறுகையில், இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி இன்னல்கள் நிறைந்ததாகவும், நோயின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. பெருமளவில் மனிதர்கள் இக்கொடிய தொற்றுக்கு ஆளாகி, உயிரை இழந்து, தங்களின் அன்பான குடும்பத்தைத் தவிக்க விட்டு சென்றுள்ளனர்.
அவர்களின் குடும்பங்கள் வலியிலிருந்து மீண்டு வந்து, நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். மடிந்து போன ஆத்மாக்கள் சாந்தியடையவும் வேண்டி கொள்கிறேன். இன்னொரு புறம் கரோனா பணியாற்றிய அரசு முன்கள பணியாளர்கள் கடும் உழைப்பைத் தந்து, இக்கொடிய காலத்தில் நம்மை பாதுகாத்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த கொடிய காலத்தை அமைதியான வழியில் நாம் கடந்து வந்திருக்க இயலாது. கடும் மன உறுதியுடன், மனிதம் காக்க போராடிய அந்த வீரர்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் வணங்குகிறேன்.
“மஹா” திரைப்படம் முழுமையாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பல தடைகளை தாண்டி நீடித்த, இந்த படப்பிடிப்பில், படக்குழுவினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை பெரும் ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய இயக்குநருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம்.
இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சிம்புவிற்கு பெரும் நன்றி. படத்தில் அவரின் பகுதிகளை ரசிகர்கள் கண்டிப்பாக பெரிய அளவில் கொண்டாடுவார்கள். இவ்வாறு நடிகை ஹன்சிகா கூறினார்.
இதையும் படிங்க : மறைந்த நண்பரின் கிளினிக்கை திறந்துவைத்த நடிகர் சந்தானம்!