அஜய் தேவ்கான் நடிப்பில் இந்தியில், கால்பந்து விளையாட்டை மையமாகவைத்து உருவாகவிருக்கும் திரைப்படம் 'மைதான்'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் கதாபாத்திரத்துக்கு கீர்த்தியின் தோற்றம் ஒத்துப்போகாததால் அப்பாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமானார்.
இது குறித்து பிரியாமணி கூறுகையில், இப்பாத்திரத்தில் நடிக்க போனி கபூர் தன்னை முதலில் அணுகியதாகத் தெரிவித்தார். அதன் பின்பு படத்தின் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியதாகக் குறிப்பிட்ட அவர், கதைக்கரு குறித்தும் தனது பாத்திரம் குறித்தும் இயக்குநர் விளக்கியதாகவும், அந்தப் பாத்திரம் தனக்கு பிடித்திருந்ததால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். ஜனவரி இறுதிக்குள் தனது போர்ஷன்களில் நடிக்கத் தொடங்கப்போவதாகவும் பிரியாமணி குறிப்பிட்டுள்ளார்.
'மைதான்' படத்தில் அஜய் தேவ்கானுக்கு மனைவியாக பிரியாமணி நடிக்கப்போகிறார். உண்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கும் பிரியாமணி, அஜய் தேவ்கானுடன் நடிக்கப்போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவரும் பிரியாமணி, விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் 'தலைவி' திரைப்படத்தில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பாத்திரத்தில் நடிக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சந்தேகம்னா என்னை கேளு மச்சான்... இணையத்தை கலக்கிய சிவா, சாந்தனு