கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.
இதனையடுத்து ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐை பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இது ஜூலை 2 (இன்று) வரை பொது மக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவுக்கு அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் ஆகியோருடன் வெற்றிமாறன் உள்ளிட்ட 1,400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.
அதில், ஏற்கனவே கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்தப் புதிய சட்டத் திருத்த வரைவு, அதனை இன்னும் வலுப்படுத்தும் என குறிப்பிட்டிருந்தனர்.
தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என கலைஞர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல.
இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதளப் பக்கத்தை பகிர்ந்துள்ளார்.