'க/பெ ரணசிங்கம்' படத்தை அடுத்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் விருமாண்டி. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'க/பெ ரணசிங்கம்' என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் விருமாண்டி.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் விருமாண்டியை வெகுவாகப் பாராட்டினார்கள். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை முடிவு செய்து, திரைக்கதை எழுதி வந்தார் விருமாண்டி. இதுவும் ஒரு உண்மைச் சம்பவம் தான் என்கிறார்கள். 1975ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்குகிறாராம் விருமாண்டி.
இந்தக் கதையைக் கேட்டவுடனே, நடிப்பதற்குச் சசிகுமார் சம்மதம் தெரிவித்துள்ளார். ஏப்ரலிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர். விஸ்வநாதன் பெரும் பொருள்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அலுவலக பூஜை இன்று (ஜன. 18) நடைபெற்றது.
இந்தப் படத்துக்குப் பாடலாசிரியராக வைரமுத்து, ஒளிப்பதிவாளராக என்.கே. ஏகாம்பரம், எடிட்டராக டி.சிவாநாதீஸ்வரன், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிகிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்றால் தத்ரூபமாகப் படமாக்க வேண்டும். அதற்குத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தால் சாத்தியப்படுத்திவிடலாம். இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்தாலே, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.
ஏப்ரலில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த ஆண்டு முடிவுக்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். தற்போது சசிகுமாருடன் நடிக்கவுள்ளவர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க... சித்ரா கொலை வழக்கு: ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று அவரது நண்பர் மனு!