இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு '83' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவின் மனைவி கேரக்டரில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
இதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரரான ஸ்ரீகாந்த் வேடத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்துள்ளார். '83' படத்தின் தமிழ் பதிப்பின் உரிமையை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பெற்றிருந்தது.
கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவிருந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படம் ஆன்லைனில் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தற்போது ஆன்லைன் வெளியடு குறித்து கபீர் கான் முன்னணி போர்ட்டலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " '83' படம் திரையரங்களுக்கு வந்து ரசிகர்கள் பார்க்க வேண்டியப்படம். இந்த சிந்தனையை முன்வைத்துதான் '83' படம் உருவாக்கப்பட்டது. பெரிய திரையில் தான் நாம் '83' உலககோப்பை அனுபவத்தை உணர முடியும். சூழ்நிலை சரியாகும் வரை காத்திருப்போம். அதை திரையரங்கில் வெளியிட தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
OTT பிளாட்பராத்தில் '83' படத்தை வெளியிட பெரும் தொகை விலை பேசப்பட்டது. ஆனால் நாங்கள் படத்தை திரையரங்கில் வெளியிட தான் உறுதியாக உள்ளோம்" என்றார்.
முன்னதாக ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஷிபாஷிஷ் சர்க்கார் கூறுகையில், " '83' படத்தை ஆன்லைனில் வெளியிட திட்டம் எதுவும் இப்போது இல்லை. இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட பல சலுகைகள் எங்களுக்கு வந்தன. ஆனால் நாங்கள் அதை மறுத்து விட்டோம். சில மாதங்கள் காத்திருப்போம். இந்த சூழ்நிலை ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் வரை நீடித்தால் அப்போது நாங்கள் இது குறித்து யோசிப்போம்" என்று கூறினார்.