நடிகர் தனுஷ், 'ராஞ்சனா' படம் மூலம் 2013ஆம் ஆண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். இதையடுத்து அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடித்தார். அப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்காமல் தோல்வியைத் தழுவியது. இதனால் தனுஷ் பாலிவுட் படங்களுக்கு சிறிய இடைவெளி விட்டார்.
இதற்கிடையில் தற்போது மீண்டும் தனுஷ், பாலிவுட்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகிவரும் 'Atrangi Re' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சாரா அலிகான் கதாநாயகியாக நடிக்க அக்ஷய் குமார் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து அக்ஷய் குமார் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, "எனக்கு ஆனந்த் படத்தில் நடிப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் கதை சொல்லும்விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
படத்தின் முழுக்கதையை கேட்காமல், வெறும் 10 நிமிடம் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துவிட்டேன். இது ஒரு சவாலான கதாபாத்திரம், அதே நேரத்தில் இந்தக் கதையை வேண்டாம் என்று என் இதயம் சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது" என்று கூறியுள்ளார்.
இதுதவிர தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள சுருளி திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்துவருகிறார். அப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் 'Atrangi Re' படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கமல்!