நாடு முழுவதும், தற்போது கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்துவருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பிராணவாயு பற்றாக்குறையால், டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அந்த வகையில், பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் 20 படுக்கைகள் கொண்ட தற்காலிக கோவிட் -19 ஐ.சி.யூ வார்டு அமைக்கத் தேவையான நிதியுதவியை பிரஹன் மும்பை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.
மும்பை சிவாஜி பார்க் பகுதியில் உள்ள மண்டபத்தில், தற்காலிகமாக கரோனா வார்டு அமைக்கப்படவுள்ளது. இந்த வார்டில் அமைக்கப்படவுள்ள படுக்கைகள், இதர சிகிச்சை கருவிகளுக்கு அஜய்தேவ்கன் தனது அறக்கட்டளை மூலமாக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
இந்த கரோனா சிகிச்சை மையத்தை பி டி இந்துஜா மருத்துவமனையின் மருத்துவர்கள் நிர்வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கரோனா தொற்றுநோய்க்கு எதிரான போரட்டத்தில் தங்களது பங்களிப்பாக அக்ஷய் குமார், அவரது மனைவி ட்விங்கிள் கன்னா ஆகியோர் 100 ஆக்ஸிஜன் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
அதே போல் ஆயுஷ்மான் குர்ரானா, அவரது மனைவி தஹிரா காஷ்யப் ஆகியோரும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.