சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவரது கணவர் ஜீவானந்தனிடமிருந்து பிரிந்த பிறகு 7 வயது மகன் சாமுவேலுடன் தனியாக வசித்து வந்தார். இச்சூழலில் இன்று (ஆகஸ்ட் 31) கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் பசி, பட்டினியில் தனது மகன் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருநின்றவூர் காவல் துறையினர், சரஸ்வதி வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அதில் 7 வயது சிறுவன் உடல் அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிறுவனின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று தினங்களுக்கு மேலாக அவரது தாய் சிறுவன் உடலுடன் வசித்து வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் விசாரணையில் வெளிவந்தது.
உண்மையில் சிறுவன் பசியால் உயிரிழந்தானா அல்லது கொலை செய்து நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.