வியாசர்பாடியில் கேட்டரிங் இன்ஸ்டியூட்டில் படித்து வரும் 17 வயது சிறுமி, கடந்த 6 மாதங்களாக அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவரோடு முகநூல் மூலம் பழக்கமாகி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மகேஷ் புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ளார்.
இவர்களது காதலை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்து, அவரது செல்ஃபோனை வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில், 6 மாதமாக காதலித்து விட்டு, தற்போது திருமணம் செய்ய மகேஷ் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அச்சிறுமி, நேற்று மாலை அவரது தாயாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நேற்றிரவு 11 மணிளவில் தனது அறையில் மண்ணெண்ணையை ஊற்றி சிறுமி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
80 சதவீத காயங்களுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சையில் இருக்கும் அச்சிறுமி கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனது இந்த நிலைக்கு காவலர் மகேஷ் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து எம்கேபி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!