டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 11.30 மணியளவில் நாரா நகரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, ஒரு நபர் அபேவை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த அபேவை பாதுகாப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அபே மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் 41 வயதான டெட்சுயா யமகாமி என்பது தெரியவந்தது. மேலும் இவர், ஜப்பான் முன்னாள் கடற்படை வீரர் ஆவார். 17 ஆண்டுகளுக்கு முன் கடல்சார் தற்காப்புப் படை பிரிவில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. அபேவை சுடுவதற்கு முன் யமகாமி கூட்டத்தில் ஒருவராய் சாம்பல் நிற டி-ஷர்ட் அணிந்து, கருப்பு பையுடனும் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
யார் இந்த நிஞ்ஜா?
யமகாமி பயன்படுத்திய துப்பாக்கியில் இரண்டு குண்டுகள் மட்டுமே இருந்தன. அதை அவர் பயன்படுத்தி இலக்கை நோக்கி துல்லியமாக துப்பாக்கி சூடு நடத்தினார். இது நன்கு பயிற்சி பெற்ற ஒருவரால் தான் செய்யமுடியும் என்பது போன்று அவர் செயல் இருந்ததாக கூறப்படுகிறது.
யமகாமி கடற்படையில் இருந்ததால் அவர் ஆயத பயிற்சிகள் பெற்றிருக்கூடும். மேலும், அவர் வசிக்கும் நாரா நகரத்தில் இருந்து சில தூரம் தொலைவில் 'இகா' உள்ளது. 15ஆம் நூற்றாண்டில் இகா என்ற இடத்தில் தான் 'நிஞ்ஜா' அல்லது 'ஷினோபி' வாழ்ந்தனர். நிஞ்ஜா/ஷினோபி என்று அழைக்கப்படுபவர்கள் பல திறன்களில் நன்கு பயிற்சி பெற்று தாக்குதல் நடத்தக் கூடியவர்கள் ஆவர்.
வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த செயல்
உளவு பார்த்தல், நாசவேலை செய்தல், மறைந்து இருந்து தாக்குதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருந்தனர். இவர்கள் கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபட்டனர். காலப்போக்கில், 1603–1867 ஆண்டுகளில் நிஞ்ஜாவின் தாக்குதல்கள் குறைந்தன. நாட்டில் அமைதி, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது. இந்தநிலையில் இன்றளவும் நிஞ்ஜா குறித்த குறிப்புகள், கட்டுரைகள் அங்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில், அபே மீதான தாக்குதல் மீண்டும் நிஞ்ஜா குறித்த வரலாற்றை திரும்பி பார்க்க வைத்துள்ளது. யமகாமியின் துப்பாக்கியில் இரண்டு குண்டுகளே இருந்த நிலையில், அபே மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக நன்கு பயிற்சி பெற்று, திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது போன்று இருந்தது.
ஜப்பான் இன்று குற்றங்கள் குறைந்த நாடாக இருந்து வருகிறது. இந்தநிலையில் பொதுவெளியில் முன்னாள் பிரதமர் மீதான தாக்குதல் பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு