சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. அதிபர் அஸாத் தலைமையிலான சிரிய அரசு, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணி அமைத்து, தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த பெரும்பாலானப் பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றியது.
அந்நாட்டின் வடமேற்கு மூலையில் துருக்கி நாட்டையொட்டியுள்ள, இத்லிப் மாகாணம் தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனைக் கைப்பற்ற சிரிய கூட்டுப் படையினர், அங்கு தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வந்தனர். இதனால் செய்வதறியாது ஆயிரக்கணக்கான சிரியர்கள் அண்டை நாடான துருக்கியை நோக்கிப் படையெடுத்தனர்.
இதையடுத்து, அகதிகளின் வருகையைத் தடுக்கவும்; இத்லிப்பில் அமைதியை நிலைநாட்டவும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு 2018ஆம் ஆண்டு சோச்சி ஒப்பந்தத்தை மேற்கொண்டது, துருக்கி அரசு.
அதன்படி, சிரியாவின் இத்லிப், ஹமாஸ், அலெப்போ உள்ளிட்ட மாகாணங்களில் 12 கண்காணிப்புக் கூண்டுகளை அமைத்து அங்கு ராணுவத்தைக் குவித்து, சிரியா தாக்குதல் நடத்தாதவாறு பார்த்துக்கொண்டது, துருக்கி அரசு. இருப்பினும், ஒப்பந்த விதிகளை மீறி சிரிய கூட்டுப் படையினர் இத்லிப்பில் அவ்வப்போது தாக்கி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சிரிய கூட்டுப்படையினர், இத்லிப்பில் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அதிருப்தியடைந்த துருக்கிப் படையினருக்கும், சிரிய கூட்டுப்படையினருக்கும் இடையே பயங்கர மோதல் மீண்டும் வெடித்தது.
வடக்கு மேற்கு சிரியாவில் அதிகரித்து வரும் ராணுவ மோதல், ரத்தக்களரியில் முடிய வாய்ப்புள்ளதாக ஐ.நா. நேற்று எச்சரித்திருந்த நிலையில், மோதல் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுப் பேசினார்.
இந்த உரையாடலில், 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோச்சி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிங்க : 'ராமர் கோயில் கட்ட அரசின் நிதி தேவையில்லை' - ராம ஜென்ம பூமி அறக்கட்டளை