ஈரானின் அணு ஆயுத செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அந்நாட்டுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஆறு வல்லரசு நாடுகள் இணைந்து JCPOA என்றழைக்கப்படும் 'ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை' 2015ஆம் ஆண்டு போட்டுக்கொண்டன.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2018ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
இதையடுத்து, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனால் பல நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் பெறமுடியாத சூழல் நிலவியது.
இதனிடையே, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா கடந்தாண்டு நவம்பரில், ஆறு மாத காலம் தற்காலிக விலக்கு அளித்திருந்தது.
இந்த விலக்கானது கடந்த மே மாதத்தோடு முடிவுக்கு வந்தநிலையில், ஈரானிடமிருந்து இனி இந்த நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிய அமெரிக்கா, இத்தடையை மீறும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இதன் காரணமாக, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொண்டது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்-அமெரிக்கா பிரச்னையைத் தணிக்கும் நோக்கில் பிரான்ஸ் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவரும் வரும் நிலையில், அதிபர் மேக்ரான் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கிலிருந்து ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹானி பின்வாங்கியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை அமெரிக்கா நீக்கினால் மட்டுமே அதனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஹாசன் ரவ்ஹானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.