உலகின் மிக சிறந்த ஒரு இயற்பியலாளராகவும், கணிதவியலாளராகவும் கருதப்படும் வில்லியம் தாம்சன் என்ற லார்ட் கெல்வின் 1824ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வடக்கு அயர்லேந்தின் பெல்ஃபாஸ்ட் என்ற இடத்தில் பிறந்தார்.
தெர்மோடைனமிக்ஸ் எனப்படும் வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதி, ஒளியின் மின்காந்தக் கோட்பாடு ஆகியவற்றில் இவரது பங்கு முக்கியமானது. இது தவிர வெப்ப நிலையை அளவிட உதவும் கெல்வின் ஸ்கேல் என்று அழைக்கப்படும் முழுமையான வெப்பநிலை அளவையும் அவர்தான் வடிவமைத்தார்.
மேலும், அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளை கடலுக்கு அடியே தகவல்தொடர்பு கேபிள் மூலம் இணைக்கும் திட்டம், ஹைட்ரோடினமிக்ஸ் (hydrodynamics) துறையில் இவரது கண்டுபிடிப்புகளாலேயே சாத்தியமானது.
பிரிட்டனில் முதல் இயற்பியல் ஆய்வகம் கெல்வினால் உருவாக்கப்பட்டது. புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திலும் அவர் தனது கல்லூரி படிப்பை பயின்றார். கெல்வின் தனது உறவினரான மார்கரெட் க்ரம் என்பரை மணம் முடித்தார்.
மார்கரெட் க்ரம் உரியிழந்ததைத் தொடர்ந்து, 1874ஆம் ஆண்டு பிரான்சிஸ் அன்னா பிளாண்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்துவந்த கெல்வின் 1899ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
1870ஆம் ஆண்டு “லல்லா ரூக்” (Lalla Rookh) என்ற படகில் மிதக்கும் ஆய்வகத்தையும் அவர் நிறுவினார். கடலின் ஆழத்தை கணக்கிட உதவும் ஆழ்கடல் ஒலிக்கும் முறையைுயம் (deep-sea sounding) அவர் அறிமுகப்படுத்தினார். பூமியின் உருவாக்கம், பரிணாம வளர்ச்சி உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட கெல்வின் பல்வேறு காலக்கட்டங்களில் பூமியின் வெப்பநிலையையும் கணித்தார்.
1900ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடந்த பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயின்ஸ் (British Association for the Advancement of Science) என்ற கூட்டதில் கலந்து கொண்டு, அவர் கூறிய வாசகம் மிகவும் புகழ்பெற்றவை. அப்போது அவர், “இயற்பியலில் இப்போது புதிதாக கண்டுபிடிக்க எதுவுமில்லை. துல்லியமாக அளவீடு செய்வதே தற்போது எஞ்சியிருக்கிறது” என்றார்.
லார்ட் கெல்வின் டிசம்பர் 17, 1907ஆம் ஆண்டு தனது 83ஆவது வயதில் ஸ்காட்லாந்தில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் மீண்டும் தள்ளிப்போகும் கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பார்க் திறப்பு!