பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனிற்கு தப்பியவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில், லண்டன் காவல் துறை கடந்த மார்ச் மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில் நேற்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய அந்நாட்டு நீதிபதி டான் இக்ராம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் அவரை நாடு கடத்துவது குறித்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.