சர்வதேச அளவில் மிகப்பெரிய மற்றும் அதிநவீன பல சாதனங்களைக் கொண்ட படையாக அமெரிக்க ராணுவம் திகழ்கிறது. அமெரிக்கா தனது நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது ராணுவத் தளங்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள கிழக்கு செர்பியன் கடல்பகுதிக்கு மேல் குண்டுவீசும் திறன்கொண்ட அமெரிக்காவின் மூன்று அதிநவீன பி-1 வகை போர் விமானங்கள் பறந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க ஐரோப்பிய கமாண்ட் (US European Command) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மூன்று குண்டுவீசும் விமானங்கள் அமெரிக்காவின் வலிமையைக் குறிக்கிறது. நட்பு நாடுகளுக்கு தேவையென்றால் எந்த நேரத்திலும் உலகின் எந்தப் பகுதிக்கும் அமெரிக்காவால் போர் விமானங்களை அனுப்ப முடியும் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.
ரஷ்ய எல்லையில் பறந்த பிறகு பி-1 போர் விமானங்கள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்குச் சென்றதாகவும் அமெரிக்க ஐரோப்பிய கமாண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இதேபோல அமெரிக்காவின் பி-52 வகை போர் விமானங்கள் பிரிட்டன் தளத்திலிருந்து ரஷ்யாவின் தென்மேற்கு எல்லை அருகிலுள்ள உக்ரேனிய வான்வெளியில் பறந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அமெரிக்காவின் இந்தச் செயல் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ரஷ்யா கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் போர் விமானங்கள் ரஷ்யா எல்லைப் பகுதிகளில் பறக்கும் சம்பவங்கள் இந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக ரஷ்யாவின் விமானப் படைத் தலைவர் கர்னல்-ஜெனரல் செர்ஜி சுரோவிகின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாதம் மட்டும் ரஷ்ய போர் விமானங்கள் 27 முறை அமெரிக்க, நேட்டோ போர் விமானங்களை பால்டிக், பிளாக், ஓகோட்ஸ்க் கடல் பகுதிகளில் தடுத்து நிறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் அதிபரானால் அது நாட்டிற்கு அவமானம் - அதிபர் ட்ரம்ப்