உலகையே புரட்டிப்போட்டுள்ள கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இந்த கரோனா தொற்று காரணமாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள்கூட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நான்கு பேருக்கு மட்டுமே கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட நால்வருக்கும் கரோனா குறித்த எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை.
இதன் மூலம் சீனாவில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,022ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 69 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 78,318 பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எல்லையிலிருக்கும் ஹைலோங்ஜியாங் மாகாணத்திலிருக்கும் சில நகரங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கரோனா மீண்டும் பரவியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு தரை வழியே வந்தவர்கள் மூலம் கரோனா மீண்டும் பரவியதை சீனா கண்டறிந்தது.
குறிப்பாக ஹைலோங்ஜியாங் மாகாணத்தின் முடஞ்சியாங்(Mudanjiang city) நகரில் கடந்த வாரம் மட்டும் 15 asymptomatic cases-கள் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு வசிக்கும் 28 லட்சம் மக்களுக்கும் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக 20 மருத்துவ கல்லூரிகளிலிருந்து 1,196 பேர் தேரந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருவதாகவும் முடஞ்சியாங் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, கரோனா முதலில் பரவிய வூஹான் நகரிலும் அறிகுறிகள் தெரியாமலிருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் (asymptomatic cases) எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, நகரிலுள்ள 1.1 கோடி மக்களுக்கும் கரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீன விமானங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!