கரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ராமோன் மகசசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, அரசு சேவை, பொது சேவை, சமூகத் தலைமை, ஊடகத்துறை, இலக்கியம், கலை, அமைதி, சர்வதேச புரிதல் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படும் ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்படும்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமரான ராமோன் மகசசேவின் நினைவாக இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அறுபது ஆண்டு காலமாக நடைபெறும் இந்நிகழ்வு, இதுவரை இரண்டு முறை மட்டுமே ரத்தாகியுள்ளது.
1970ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, 1990ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகியவற்றின் காரணமாக மட்டுமே இதுவரை இவ்விருது விழா ரத்தாகியுள்ளது.
கரோனா பெருந்தொற்றின் தாக்கம் பிலிப்பைன்ஸில் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், இம்முடிவை அந்த அமைப்பு எடுத்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் வினோபாபாவே, அன்னை தெரசா தொடங்கி, கர்நாடக சங்கீதப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, செய்தியாளர் ரவீஷ் குமார் ஆகியோர் வரை இந்த பெருமைக்குரிய விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டம் - அடிமைகளை விற்றவரின் சிலை அகற்றம்