கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர் கோரிக்கைவைத்தனர். இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் ட்ரம்ப் - கிம் ஜாங் உன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா உத்தரவாதம் அளித்தது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே சுமுக உறவு ஏற்பட்டாலும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை தொடர்பான முரண்பட்ட தகவலும் வெளியாகி பதற்றமான சூழல் உருவானது.
இதனையடுத்து, கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாம் சந்திப்பில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. எனினும், தங்களுக்குள் ஆக்கப்பூர்வ மற்றும் சுமுகமான உறவு நீடிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வட கொரியா மீது அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிறப்பித்த தடைகளை முறியடிக்க இரண்டு நிறுவனங்கள் உதவியதாக கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சீனாவின் இரண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அலுவலர் ஒருவர் தகவல் தெரவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டான், "அனைத்து நிறுவனங்களும் வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்து-கொள்ள வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.