உய்கர் இஸ்லாமியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் சீன நாட்டின் சிறுபான்மையினாரான உய்கர் இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிக்கும் சீன அரசு, அதன் அலுவலர்கள் மீது தடைகளைப் பிறப்பிக்க முடியும்.
சீனாவில் உள்ள சிறுபான்மைப் பிரிவினரான உய்கர் இஸ்லாமியர்கள் மீது, அந்நாட்டு அரசு தொடர்ச்சியான வன்முறைகளைக் கட்டவிழ்த்தும், கட்டுப்பாடுகள் விதித்தும் வருவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சீனாவின் வடமேற்கு எல்லையில் உள்ள தன்னாட்சி மாகாணமான சின்ஜியாங் பகுதியில் உய்கர் இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும்விதமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, லட்சக்கணக்கான உய்கர் இன மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து, தொடர் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளைக் கட்டுபடுத்தி சீனாவுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாகவே அதிபர் ட்ரம்ப் இது போன்ற தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம், கரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ட்ரம்புக்கும் சீனாவுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனா- இந்தியா நிலவரம்: உற்று நோக்கும் அமெரிக்கா!