1955ஆம் ஆண்டு முதல் 1975 வரை 20 ஆண்டுகள் நடைபெற்ற வியட்நாம் போரில் 58,220 அமெரிக்க வீரர்களை அந்நாடு இழந்தது. அமெரிக்காவின் மிக மோசமான போர்களில் ஒன்றாக வியட்நாம் போர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வியட்நாம் போரில் அந்நாடு இழந்த வீரர்களைவிட அதிக பேரை கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த சில வாரங்களில் இழந்துள்ளது. அமெரிக்காவில் 59,266 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இது வியட்நாம் போரில் இ்நநாடு இழந்த வீரர்களைவிட அதிகம்.
அதேபோல அமெரிக்காவில் இதுவரை 10,35,765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச அளவில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
வைரஸ் தொற்று அமெரிக்காவில் அதிகமாக இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "வைரஸ் தொற்று மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிகமாக இருக்கக் காரணம், நாங்கள் மற்ற எந்த நாடுகளைவிடவும் மிக அதிகமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். இதனால்தான் வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகமாக இருப்பதுபோல தெரிகிறது" என்றார்.
தொடர்ந்து உயிரிழந்தவர்கள் குறித்துப் பேசிய அவர், "இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்காகவும் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம். இதைப் போல ஒன்றை நாம் இதற்கு முன் கண்டதில்லை.
இந்தப் பொருந்தோற்றின் மோசமான நாள்கள் முடிந்துவிட்டன. நாங்கள் முன்னைவிட வலிமையாக மீண்டு வருவோம். இந்த நெருக்கடியான காலத்தில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பெரும் தியாகத்தைப் புரிந்துள்ளனர்.
அமெரிக்கா தனது பொருளாதாரத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்" என்று கூறினார்.
வல்லுநர்களின் கருத்தை அதிபர் ட்ரம்ப் புறக்கணிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், "நான் வல்லுநர்களின் கருத்தைக் கேட்பேன். தொடர்ந்து அவர்களின் கருத்துக்களைக் கேட்பேன். ஆனால் பெரும்பாலான வல்லுநர்கள் இந்தத்தொற்று குறித்து தவறான கருத்தைத் தெரிவித்தனர். இது இவ்வளவு பெரிய பிரச்னையாகும் என்று அவர்கள் கருதவில்லை.
வல்லுநர்கள் செய்திருக்கக் கூடாது என்ற கருதிய சிலவற்றை நான் துணிச்சலாகச் செய்தேன். நாட்டின் எல்லைகளை மூடினேன். சீனாவிலிருந்து வருவோர்களுக்குத் தடை விதித்தேன். இந்தத் துணிச்சலான முடிவுகள் காரணமாகத்தான் வைரஸ் பரவல் குறைந்துள்ளது" என்றார்.
அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு கடந்த சில நாள்களாகவே சற்று குறைந்துவருகிறது. இதனால் கலிஃபோர்னியா மாகாண கவர்னர் மாகாணத்திலுள்ள ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய மாகாணங்களில் கலிபோர்னியாவும் ஒன்று.
அதேபோல நியூ ஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, டெலாவேர், ரோட் தீவு, மாசசூசெட்ஸ் உள்ளிட்ட பல மாகாணங்களும் ஊரடங்கைத் தளர்த்த முடிவு செய்துள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில் மே 15ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவால் 60,000 அமெரிக்கர்களே உயிரிழப்பர், அதனால் எனக்கே வாக்களியுங்கள்!' - ட்ரம்ப்