அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனாலட் ட்ரம்ப்பும் அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், முன்னாள் துணை அதிபரான பிடனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே, அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிடனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 81 ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் உள்பட 291 முன்னாள் தேசிய பாதுகாப்பு அலுவலர்கள் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் எழுதிய கடிதத்தில், "பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ள உலகத்தை சரி செய்ய பிடனின் குணம், கொள்கை, அறிவாற்றல், தலைமைப் பண்பு ஆகியவை தேவை. நம் நாடு சிக்கித் தவித்து வருகிறது. அமெரிக்காவை ஒன்றிணைக்க பிடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் உதவுவார்கள் என நம்புகிறோம். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் நம்மை வழிநடத்திச் செல்வார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 489 தேசிய பாதுகாப்பு அலுவலர்கள் பிடனுக்கு ஆதரவாக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.