திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் என். பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மனைவி அர்ச்சனா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள சந்திரவதனி ஆற்றுப் பகுதியில் உள்ள தேங்கியிருந்த தண்ணீரில் துணி துவைக்கச்சென்றனர். அவர்களுடன் சக்திவேலின் உறவினர்களின் குழந்தைகளான சத்திய பாரதி, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சென்றனர்.
சக்திவேலும், அர்ச்சனாவும் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது சத்திய பாரதியும், ஐஸ்வர்யாவும் தண்ணீருக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களைக் காப்பாற்ற சக்திவேலும் அர்ச்சனாவும் முயன்றபோது சேற்றில் சிக்கி நான்கு பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இன்று உடற்கூராய்வு நடைபெற இருந்த நிலையில் இறந்தவர்களின் ஒரு உடலுக்கு இரண்டாயிரம் வீதம் நான்கு உடலுக்கும் சேர்ந்து 16 ஆயிரம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனை பிரதான வாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்குச் செவிசாய்க்காத பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காகப் பணம் கேட்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொதுமக்களை காவல் துறையினர் சமாதானம் செய்து கலைந்துபோக வைத்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.