சென்னை எழும்பூரில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைய புத்தக விற்பனை நிலையத்தை நடிகரும், மக்கள் நீதி கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (பிப்.12) திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல், 'இது வழக்கமான மேடை பேச்சுகளில் உபயோகிக்கும் வார்த்தை என்றாலும், என் வாழ்க்கையின் உண்மை தத்துவம் எனக் கூறி, அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல; இது தான் உயிர்வாழ்வதற்கான காரணம்.
இந்த உறவு இருந்தால்தான் நாம் நிமிர்ந்து நிற்க முடியும். 'மொழி' இருந்தால்தான், இவர்களுடன் அளவளாவ முடியும். இதனைக் காக்க வேண்டியது எனது கடமை. பா.ரஞ்சித், இயக்குநரான ஆரம்ப கட்டத்தில் சினிமா விழாவிற்கு நான் வரவில்லை. ஆனால், ரஞ்சித்தும், நானும் இல்லாதபோதும் இருக்கப்போகும் ஒரு தாக்கம் இது. அதனால், இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்' எனத் தெரிவித்தார்.
’35 ஆண்டுகளுக்கு முன்பு 26 இதழ்கள் மட்டுமே நடத்தி முடித்த பேச்சு மட்டுமே இருந்து வருகிறது. அதுபோல, நீலம் பண்பாட்டு மையம் (Neelam Cultural Center) இயங்கி வருகிறது. இந்த மையம் எத்தனை ஆண்டுகள் இருக்கிறதோ? அத்தனை நூற்றாண்டுகள் ஆயுள் உள்ளதாக அர்த்தம். அரசியல், கலாசாரம் என்பதனை தனித்தனியாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.
ஆனால், நாம் உருவாக்கியது அரசியல், அது மக்களுக்கானது. ஆனால், அரசியலை தலைகீழாக பிடித்துக்கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் எனும் வார்த்தையே இனி வரக்கூடாது என நினைக்கிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் எனும் எண்ணம் மக்களுக்கு வரும்போது தான் ஜனநாயகம் வாழும். தலைவனைத் தேடும் பல தலைவர்களுக்கு கொடி கட்டிக்கொண்டு இருக்கிறோம்.
'சாதி'யே அரசியல் எதிரி: அரசியலில் எனக்கு பிரதான எதிரி 'சாதி' தான். எனது 21 வயது முதல் இதே கருத்தில், தான் இருந்து வருகிறேன். கருத்து மாறவில்லை; வார்த்தை பக்குவம் வந்துள்ளது. சமூகத்தில் கொடூரமான ஆயுதம் சாதியாக உள்ளது. அம்பேத்கர் முதல் இன்று வரை பலரும் சாதிக்கு எதிராக உள்ளனர். அதன் தொடர் போராட்டமாக, தொடர் நீட்சியாக தான் பலவும் உள்ளது. மய்யமும், நீலமும் ஒன்றுதான்.
ரஞ்சித் போராட்டம் என்பது தாடிகள் வெள்ளையானாலும் நிகழும். உங்களது முயற்சிக்கு தானே ரசிகராக வேண்டும்' என ரஞ்சித்தை வாழ்த்தி கமல்ஹாசன் பேசினார்.
டிஜிட்டல் சினிமா: தொடர்ந்து பேசிய இயக்குநர் ரஞ்சித், 'புத்தகங்கள் மீதும் நம்பிக்கை உள்ள மாமனிதர்களில் ஒருவர் கமல். சினிமா தான் கலாசார மையமாக உள்ளது. புத்தகங்கள் தான் சினிமாவிற்கு நகர்த்தியது. சினிமா மூலம் தான் உலக ஆளுமைகளை தேடிப் பார்க்க வைக்கிறது. அதன்படி தேட வேண்டியவர்களில் ஒருவர் கமல். திரைப்படங்களில் அவரது வசனங்கள், கவிதை, எழுத்து பாணி தான் வியக்க வைக்கிறது. சினிமா துறையினை, படச்சுருளில் இருந்து டிஜிட்டலுக்கு மாற்றியவர் கமல் தான். இருந்தாலும் எழுத்து ஊடகம் என்பது பவர்ஃபுல்லான ஒன்றாக உள்ளது. இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வுக்கான புத்தகங்கள் வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு