சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக தேசிய செயலாளரும், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான முரளிதர ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்... என பேச தொடங்கிய முரளிதர ராவ், 'இந்தியாவில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்து முதல் கட்ட தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக 18ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கிறது. பரப்புரை களத்தில் தீவிரமாக வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. தென் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை ஓரளவு நிறைவடைந்து விட்டது' என்று தெரிவித்தார்.
பின்னர், நம் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அந்தக் கேள்வி, பதில் தொகுப்பு கீழ் வருமாறு:
தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
தமிழ்நாட்டில் கடந்த 2014 தேர்தலில் பாஜக இதர கட்சிகளோடு கூட்டணி அமைத்து 19.5 வாக்குகள் பெற்றது. அப்போது அதிமுக கட்சி 37 இடங்களை தனித்து கைப்பற்றியது. தற்போது இதர கட்சிகளோடு சேர்த்து அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறுவோம். மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியில் நீடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பொதுமக்களின் வரவேற்பு எப்படி உள்ளது?
இளைஞர்கள் மத்தியிலும், நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்புள்ளது. மோடி மற்றும் அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் அது செயல்படுத்தப்படும்.
புல்வாமா தாக்குதல், நீட், ஸ்டெர்லைட் போன்ற பிரச்னைகளால் பாஜகவின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா?
புல்வாமா தாக்குதலுக்கு பாஜக அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளது. நீட், ஸ்டெர்லைட் போன்ற பிரச்னைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. அதில், எங்கள் பங்கு எதுவும் இல்லை.