சென்னை பாடியை சேர்ந்தவர் முஹம்மது மன்சூர், இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் திருமங்கலத்தில் இயங்கி வரும் வி.ஆர் மாலில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
திரைப்படம் துவங்க நேரமிருந்ததால் மேல்தளத்தில் உள்ள கேஎப்சி உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்ற அவர் உணவுகள் ஆர்டர் செய்து கொண்டிருந்தார். அவர் உணவை பெற்றுக்கொண்டு குடும்பத்தினருடன் உணவருந்திய போது தனது செல்போன் தொலைந்து போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து கேஎப்சி உணவக உரிமையாளரிடம் கூறி அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் முஹம்மது மன்சூர் உணவு ஆர்டர் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை லாவகமாக திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் கள்ளநோட்டு.. ஒருவர் கைது