திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருநகர். இங்கு தலைமைத் தபால் நிலைய உதவி அலுவலராக மணிமாறன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
25 சவரன் நகைக் கொள்ளை:
இவருக்குச் சொந்தமான வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 25 சவரன் நகையைக் கொள்ளையடித்து சென்றதுமட்டுமல்லாமல், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல் துறையினருக்குத் தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து தீ வைத்து கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கலாமென மணிமாறன் தெரிவித்தார். மேலும், நள்ளிரவு நடந்த இந்தச் சம்பவம் அருகில் இருப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் மற்றும் நகர் வடக்கு காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளே சென்று பார்த்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும்,கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கும் விதமாக மோப்பநாய் 'ரூபி' வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கைரேகைத் தடவியல் நிபுணர் பிரேமா உள்ளிட்ட குழுவினரை வரவழைத்துத் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்ற நோக்கத்தில் தற்போது அதற்கான விசாரணையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
திண்டுக்கல் நகரின் மையப் பகுதியாக உள்ள திருநகரில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவமானது அதிகாலை முதல் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது - ஆளுநர் மாளிகை தகவல்