தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் கூலி வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் (குட்டி யானை) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற பணியாள்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் திருமண கொழுந்துபுரத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (65), செல்லத்தாய் (60), மாரியம்மாள் (50), லிங்கம்மாள் (35), பேச்சியம்மாள் (30), விஜி (36) ஆகியோர் நிலைமை மோசமாக உள்ளது.
ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர்கள் தற்போது மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மணியாச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.