வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் கங்கையம்மன் கோயில் தெருவில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் காமராஜரால், ஆம்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம் திறக்கப்பட்டது. அதன்பின் சில காலம் இயங்கிய இச்சங்க கட்டடம் தொழில்நுட்ப வளர்ச்சியால், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டது. எனினும் பழைய கட்டடம் தற்போது ஆவின் பாலகமாகச் செயல்பட்டு வருகிறது.
தற்போது அந்த கட்டடம் பாழடைந்து, கட்டிடத்தின் மேல் அரசமரங்கள் வேரூன்றிக் கட்டிட பக்கவாட்டுச்சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டடத்தின் வழியாக தினமும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆம்பூர் கடை வீதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இதனைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியரிடத்தில் பல முறை மனு அளித்தும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் அக்கட்டடத்தின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் ஆவின் பாலகம் செயல்படுவதால் பாலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால், இக்கட்டடத்தின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அலுவலர்கள் விரைந்து இக்கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.