திருச்சி: மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.
இந்த மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமான சுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் சில நாள்களுக்கு முன்பு இங்குத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று (நவ.19) கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு மாலை ஆறு மணியளவில் 237 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரக் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியைத் திரியாகக் கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றியும் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த திரியில் கார்த்திகை மகா தீபம் ’அரோகரா’ கோஷத்துடன் ஏற்றப்பட்டது.
இந்த மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாள்கள் அணையாமல் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் கொட்டும் மழையில் கார்த்திகை தீப விழா!