திருப்பூர்: 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. தேர்ச்சி முடிவுகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில், ”மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 398 பேர் தேர்வு எழுதினர். அதில் 10,418 பேர் மாணவர்கள், 12,980 பேர் மாணவிகள். தேர்ச்சி விகிதம் 97.12 விழுக்காடாக உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவ - மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மாவட்டம் முழுவதும் 111 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், வரும் காலங்களிலும் சிறப்பாகச் செயலாற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.