திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில், தினசரி உள்ளூர் நோயாளிகளும், மாவட்டத்தின் ஊரக பகுதியைச் சேர்ந்த உள் - வெளி நோயாளிகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து, மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.
அதில், மருத்துவமனையில் மருத்துவம் நன்றாகப் பார்க்கப்படுவதாகவும் , ஆனால் செவிலியர்களும், பணியாளர்களும், நோயாளிகளை அணுகும் முறை கடுமையாக உள்ளதாகவும், காவலாளிகள், பார்வையாளர்களைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும், குழந்தைகள் பிரிவில், கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், காயங்களுக்கு கட்டுபோடும் இடத்திலும், பணம் தர வேண்டிய நிலை உள்ளது. மகப்பேறுப் பிரிவில் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 500 வரை பணம் பெறுவதாகவும் , மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போதும் பணங்கொடுக்க வேண்டி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.