தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் காந்திமதி நாதன். இவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பாலத்தின் கரைப் பகுதியில் ஸ்டெர்லைட் நிறுவனம், அதன் ரசாயன கழிவுகளைக் கொட்டி வைத்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும், ஸ்டெர்லைட் நிறுவனத்திடமும் பல முறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, ஆலை கழிவுகளை அகற்ற உத்தரவு வாங்கினேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உடனடியாக உப்பாற்றில் உள்ள கழிவுகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கோரியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளைக் கொட்டப்பட்டுள்ளதற்கு, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் சட்டத்தின் கீழ் கழிவுகளைக் கொட்டியவர்கள் மீது, சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.